Saturday, July 25, 2009

அம்மாவின் குரல் தேடி..,




(laajee -இன் டைரியில் அம்மா என்ற கதை தொகுப்பில் இருந்து ஒரு கதை உங்களுக்காய் உங்கள் அன்பிற்காய், அன்னையின் அற்புதம் அறிவதற்காய்..)

8 மணி நேர பயணக் களைப்பில் வந்ததும் படுத்து உறங்கி போயிருந்தேன். பயணக் களைப்பின் அழுத்தமோ என்னவோ காலை வெகு நேரம் கழித்து எழுந்தும் சற்று சோம்பலாகவே இருந்தது.கடைசி இரண்டு நாள், தொழில் நிமிர்த்த மீட்டிங்கில் மொபைலை மறந்திருந்ததால் எழுந்தவுடன் முதல் வேலையாக அதனை பெட்டியில் இருந்து எடுத்து ஆண் செய்தேன். மொபைல் அதன் முழுமையை அடைந்த உடனேயே ஒலித்ததில் தெரிந்தது யாரோ தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது. ஆர்வமாய் விடை அளிக்க செவியில் வைத்த உடனேயே எதிர்முனை பரபரப்பாக பேச ஆரம்பித்தது....

"என்னப்பா கார்த்தி, எத்தனை நாளா உனக்கு போன் பண்ணேன்.. போகவே இல்லப்பா... சரி உடனே நீ கிளம்பி ஊருக்கு வாடா.. அம்மாவுக்கு உடம்பு முடியல.. வந்து நீ ஒரு தடவ பார்த்துட்டு போயா..".. பேசியது மாமா தான். குரல் சிறிது உடைந்தே இருந்தது. எனக்கும்தான்.! "என்ன மாமா அம்மாவுக்கு என்னாச்சி? இப்ப எப்படி இருக்காங்க? மருத்துவர்ட்ட காமிச்சிங்களா? " என் அத்தனை கேள்விகளுக்கும் அவர் சொன்ன பதில் கிளம்பி வா என்பதே..

அவசர அவசரமாக விமான சீட்டு வாங்கி நாட்டை நோக்கி பயணிக்கையில் மனது முழுக்க அம்மாவின் நினைப்பே. அப்பா நான் சிறியவனாக இருந்த பொழுதே இறந்து போயிருந்ததால் எனக்கான அத்தனையும் அம்மாதான் செய்தார். காலைல வேலைக்கு போயிட்டு சாயங்காலம் தான் வருவார். அதுக்கு பிறகு பசியோடு இருக்கும் எனக்கு அவசரமா சமைச்சி போட்டுட்டு தானும் உண்ணுவார். அம்மா கஷ்ட படுறத பார்க்கிற நேரம்லாம் ரொம்ப அழுகையா வரும். இருந்தாலும் வெளி காட்டாமலே கவனமா படிச்சி கல்லூரி போனேன். அம்மா ஆசை எல்லாம் எப்படியாவது நான் ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டு கோட்டு சூட்டுலாம் போட்டு ஊருக்கு வரணும், எங்க ஊர்லே பெரிய மனுஷனா இருக்கணும்னு தான். அதுக்காகவே எனக்கு கிடைச்ச வெளிநாட்டு வேலைய மறுப்பேதும் சொல்லாம செய்ய சொன்னாங்க. அம்மா பட்ட கஷ்டம்லாம் போக்க எனக்கு அத்தன ஆசையா இருந்துச்சு. அத்தனையும் மனசுல வச்சிதான் ரொம்ப கஷ்ட பட்டு வேலை செஞ்சிட்டு இருக்கேன், எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்தே அம்மா நகை போட்டு நான் பார்த்ததே இல்ல. இதோ என்னோட பெட்டியில நான் ஆச ஆசையா அம்மாவுக்கு வாங்கி போற நகைகள், சேலைகள் எல்லாம்.. இதெல்லாம் பார்த்து அம்மா எப்படிலாம் சந்தோஷ படுமோ? பல கற்பனைகளோடே நாடு வந்து சேர்ந்தேன்.

விமான நிலைய வாசலிலேயே மாமா, தோழர்கள் என ஓரு கூட்டமே இருந்தார்கள் அனைவர் கண்களிலுமே நீர் தொற்றி இருந்ததுமே மனசுக்கு வலியா இருந்தது. ஆச ஆசையா மாமாவ பார்த்து கேட்டேன்! அம்மா எப்படி மாமா இருக்கு? கேள்வி முடியும் முன்னமே அவர் அழ தொடங்கி சொன்னார். "கார்த்தி , அம்மா நம்மள விட்டுட்டு போயட்டாங்கய்யா, உனக்கு போன் செய்து செய்து நீ கிடைக்கல.. நாளாகவே நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்பா" சொல்லிக்கொண்டே போனார்....
தெய்வமே! முதல் முறை உலகம் இருண்டது யார் பேசுவதும் கேட்க வில்லை.ஆம் அழுதேன்.. அழுதேன்.. அநேதமாக நான் அழுததை பார்த்து அந்த விமான நிலைய வாசலில் பலர் அழுதிருப்பார்கள். எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாமே முற்று பெறாத கனவாக்கி விட்டு எப்படி அம்மா இறந்தார்? வீடு வந்து சேர்வதற்குள் கண்களில் நீர் வற்றி வலி கூடி இருந்தது.

இதோ என் அம்மா கோலமிட்ட வாசல்.. குப்பைகளின் கூடாரமாய், நான் ஆடி விளையாடிய கதவு.. அன்னையின்றி அனாதையாய் என்னை போல் உடைந்து போய்.. எத்தனை பாசமாய் பார்த்த வீடு இன்று அத்தனையும் எங்கே...? இரண்டு நாள் முழுக்க அழுகைதான்.. ஆறுதல் தந்த சொந்தங்கள் எல்லாம் சென்றிருந்தனர். பக்கத்து வீட்டு அக்கா மட்டும் உணவு கொண்டு வந்து தந்தவாறே இருந்தார். மாலை பொறுமையாக என்னருகே அமர்ந்த அக்கா பேச ஆரம்பித்தார்... "அம்மாவுக்கு ரொம்ப ஆசைடா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு. அடிக்கடி சொல்லுவாங்க. என் புள்ள பசி தாங்க மாட்டான். இப்ப என்ன பண்ணுறானோ!? புள்ளைக்காக அரிசி பானைல நாட்டுகோழி முட்டைலாம் எடுத்து வச்சிருக்கேன். புள்ள என்னைக்கு வருமோ ! வயிறு நிறைய சாப்பிட சொல்லனும்னு சொல்லி சொல்லி ஆற்றிபோகும்டா.." அக்காவும் ஆறுதல் சொல்லி வெளியேறினார்.

நானும் கொண்டுபோன நகை, புடவை எல்லாத்தையும் அம்மா போட்டோ முன்னாடி வச்சிட்டு எழுகையில் அரிசி பானை கண்ணில் படவே திறந்து பார்த்தேன். உள்ளே அம்மா ஆச ஆசையா அடுக்கி வச்சிருந்த நாட்டு கோழி முட்டைகள்.. பார்த்ததுமே மறுபடியும் அழுகை வந்தது.. அழுகையிலே எங்கோ ஒலித்தது அம்மாவின் குரல்...
"அய்யா சாமி.. அரிசி பானைல நாட்டு கோழி முட்டை வச்சிருக்கேன்.. தினமும் காலைல குடிச்சிருயா.. அம்மா இருக்கும் போது அழாத ராசா"
முட்டையில் விழுந்த கண்ணீரை மறந்தவாறே என் அன்னையின் குரல் தேடி நகர்ந்தபடியே நான் ...

உங்கள் சேவகன்...,
..laajee..,

1 comment:

சுரபி said...

படித்ததும் கனத்து விட்டது மனம்..